Tuesday, October 11, 2011

எனக்குள்ளேயே என் எதிரி..!!

எனக்குள்ளேயே
என் எதிரி
விவேகம் இல்லாத
வேகத்தில்...

சகிப்புத்தன்மை இல்லாத
திகைப்பில்...

நினைத்தது நடக்காத
மனகசப்பில்...

நடந்ததை ஏற்காத
மடமையில்...

விரக்தியில்...
வேதனையில்...
அதிகாரத்தில்...
ஆணவத்தில்...

என்னையே அந்நியனாக்கிட
எனக்குள்ளேயே என் எதிரி.

சினம்..
சிந்திக்கமறுக்கும்.

அச்சில் ஏறாத
அர்ச்சனைகளையும்
உச்ச வரம்பில்லா
நச்சு மொழிகளையும்
ஊர்வலம் அனுப்பும்.

போன பிறகுதான் தெரியும்
வந்தது மயில் அல்ல
புயல் என்று.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
பாய் போட்டு
பந்தி விரிக்காது.

சினம் குணமல்ல
மனம் சம்பந்தபட்டது.

ஐந்து நிமிடம்
வாய்மூடி இருந்தால்
ஆவேசக் குரங்கு
வழி பார்த்துப் போகும்
பழி பாவம் இன்றி.



Monday, July 4, 2011

அஞ்சாங்கிளாஸ் லீடர்!

பங்கஜம் டீச்சருக்கு
பாயாசம் வைக்க பாசிப்பருப்பு
பல்விளக்க ஆலங்குச்சி
அடுப்பெரிக்க பருத்திமாரு

பத்மா டீச்சருக்கு எலந்த பழம்
கோணப் புளியங்கா
பிரசிடண்டு வீட்டு பசுப்பால்
எஸ்தரக்கா வீட்டு ரணிமுத்து

கண்ணுசாமி வாத்தியாருக்கு
காய்ஞ்சகடலை கத்திரிக்கா முருங்கக்கா
கீழக்கடை அரிசி முறுக்கு

இத்தனையும் அலைந்து வாங்கி
பள்ளிக்கூடம் போய் சேரும்போது மணி அடித்து
வீட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள்

பலமாதமாய் இந்த கதைதான் நடக்கிறது
ஏனோ வகுப்பறையில் நுழையும் வாய்ப்பே
கிடைக்கவில்லை ஆறுமுகத்திற்கு..

அட்டெண்டென் மட்டும் சரியாய் விழுந்துவிடும்
அந்த ஐந்தாம் கிளாஸ் லீடருக்கு..

படிக்க முடியாத வருத்தம் அவனுக்கு
ஒரு வேளை பாஸானால்
வருத்தம் வாத்தியார்களுக்கு!!

Wednesday, June 29, 2011

முரண் - 02.

நாம் ஏற்றும்
மெழுகின் வெளிச்சத்தை
வெகுவாகப் பேசுகின்றோம்...

வெளியே கிடக்கும்
நிலவின் ஒளியை
நினைப்பதே இல்லை...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"கடினப்படாமல்
கைசேரும் பொருளை - நாம்
கௌரவிப்பதே இல்லை"


Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"


Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!



Monday, June 6, 2011

கந்தா நீ வரவேண்டும்!

பழநி பதியில் வாழ்பவனே! - எம்மை
பாதம் இரண்டால் ஆள்பவனே!
பழநி எனவே ஆனவனே! - என்றும்
காக்கும் உந்தன் பேரருளே!

அரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்
அல்லல் நீக்கி காத்திடவே
அரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்
அல்லல் போக்கி கத்திட்டாய்!

அன்பும் அருளும் நிறைந்தவனே! - கூடும்
அல்லல் தம்மை அழிப்பவனே!
இன்பம் அனைத்தும் உன்னாலே! எம்மை
என்றும் காப்பது உன்வேலே!

இமயந் தன்னில் பிறந்தவனே! - எங்கள்
இதய மெல்லாம் நிறைந்தவனே!
உமையின் மைந்தன் ஆனவனே! - காவடி
உனக்கென எடுத்தோம்! வரவேண்டும்!


Monday, May 30, 2011

பெண்ணே நீ!

பெண்ணே! இனியவளே! கேளம்மா! - தூய
பெண்மையினால் இவ்வுலகை ஆளம்மா!
மண்ணே மணமாகும் உன்னாலே! - இதை
மறந்தால் துயராகும் எந்நாளும்!

ஆசைகள் நிறைந்தது வாழ்வம்மா! - வீண்
ஆசை தருவதோ தாழ்வம்மா!
நாசமாய் செய்வன தாம்நீக்கி - இந்த
நானிலம் வளமுறச் செய்யம்மா!

படித்திட வேண்டும் முறையாக! - நீ
புகழுற வேண்டும் நிறைவாக!
படிப்பது போலொரு சுகமில்லை! - கல்வி
போலொரு காக்கும் நலனில்லை!

கொண்டவன் தன்னைப் போற்றிடுக! - வாழ்வில்
கருத்துடன் கடமை ஆற்றிடுக!
வண்டமிழ் போன்று நீ வாழ்ந்திடுக! - வையம்
வளத்தி னுள்ளே ஆழ்ந்திடுக!