Friday, June 24, 2011

முரண் - 01.

பூக்கள் பூத்து
செடிகள்
தன்னை அழகுபடுத்துகின்றன..

மலர்களைப் பறித்து
மனிதன்
தன்னை அழகுபடுத்துகிறான்...

படைப்பின் ரகசியம் புரிகிறது.

"பறிப்பவர்கள்
பறிகொடுப்பவர்களைப் பற்றி
பரிதாபப்படுவதே இல்லை"


Wednesday, June 8, 2011

உன்னை நம்பு!

பஞ்ச பூதங்களின்
தொகுப்பப்பா நீ - உனக்குள்
வேறு பூதங்கள் எதற்கு?

சந்தர்ப்பங்கள் துரத்தியதால்
சங்கடத்திடம் அகப்பட்டவனா
நீ!

தாழ்வு மனப்பான்மையால்
வாழ்வில் தள்ளாடுபவனா
நீ!

சோகங்கள் சுட்டுச்சுட்டுச்
சோர்ந்து போனவனா
நீ!

சாய்ந்து கொள்ள
தோள்கள் தேடித் திரிந்தவனா
நீ!

நீ யாரானால் என்ன?

முதலில் உன்
சங்கடங்களை வழித்து
சகதியில் எறி!

கண்ணீரைத் துடைத்தெறி
விழிகளை அகலப்படுத்தி
உலகினைப் பாரு!

எழுந்து நட!

உனக்கும் வழி கிடைக்கும்!
உன்னை நம்பு!
உழைப்பை நம்பு!

குறிவைத்து வைத்து
இலக்கின் எல்லையை - உன் பாதம்
சென்று சேரட்டும்!

பிறகு தேடு நண்பனே
நீயும் சாய்ந்து கொள்ள
உனக்கும் தோள் கிடைகும்!



Monday, June 6, 2011

கந்தா நீ வரவேண்டும்!

பழநி பதியில் வாழ்பவனே! - எம்மை
பாதம் இரண்டால் ஆள்பவனே!
பழநி எனவே ஆனவனே! - என்றும்
காக்கும் உந்தன் பேரருளே!

அரக்கர் தம்மை அழித்திடவே - தேவர்
அல்லல் நீக்கி காத்திடவே
அரக்கர் தம்முடன் போரிட்டாய் - தேவர்
அல்லல் போக்கி கத்திட்டாய்!

அன்பும் அருளும் நிறைந்தவனே! - கூடும்
அல்லல் தம்மை அழிப்பவனே!
இன்பம் அனைத்தும் உன்னாலே! எம்மை
என்றும் காப்பது உன்வேலே!

இமயந் தன்னில் பிறந்தவனே! - எங்கள்
இதய மெல்லாம் நிறைந்தவனே!
உமையின் மைந்தன் ஆனவனே! - காவடி
உனக்கென எடுத்தோம்! வரவேண்டும்!


Monday, May 30, 2011

பெண்ணே நீ!

பெண்ணே! இனியவளே! கேளம்மா! - தூய
பெண்மையினால் இவ்வுலகை ஆளம்மா!
மண்ணே மணமாகும் உன்னாலே! - இதை
மறந்தால் துயராகும் எந்நாளும்!

ஆசைகள் நிறைந்தது வாழ்வம்மா! - வீண்
ஆசை தருவதோ தாழ்வம்மா!
நாசமாய் செய்வன தாம்நீக்கி - இந்த
நானிலம் வளமுறச் செய்யம்மா!

படித்திட வேண்டும் முறையாக! - நீ
புகழுற வேண்டும் நிறைவாக!
படிப்பது போலொரு சுகமில்லை! - கல்வி
போலொரு காக்கும் நலனில்லை!

கொண்டவன் தன்னைப் போற்றிடுக! - வாழ்வில்
கருத்துடன் கடமை ஆற்றிடுக!
வண்டமிழ் போன்று நீ வாழ்ந்திடுக! - வையம்
வளத்தி னுள்ளே ஆழ்ந்திடுக!



Monday, November 8, 2010

நவ நாகரீகம்...

முடியை சீர்படுத்தி..
முகத்தை மழித்து..
உடம்பை குளித்து..
ஆடையைச் சலவை செய்து..
காலணியைப் பளபளப்பாக்கி..
அழகாய் அணிந்து கொண்டான்..
ஆனால்,
மனதை மட்டும்..???


Sunday, October 24, 2010

நாம் காளான்கள்..

அழகிய காளான்
ஒன்று
ஆலமராத்தடியில்
குற்றுயிராக
அறுபட்டுக்
கிடந்தது...
எனக்கோ கவலை
காளான் மீதல்ல..
நம்மீது..!!

Sunday, October 3, 2010

தனித்தமிழாட்சி மலரட்டுமே...


தனித்தமிழ் இன்பத்தேனாகும்! - அது
. . . . தருதல் என்றும் சீராகும்!
தனித்தமிழ் சிதைந்தால் கேடாகும்! - அது
. . . . தமிழ்மொழிக் கென்றும் தீதாகும்!

தனிதமி ழாட்சி தீதல்ல! - இங்கு
. . . . சிலரதை எதிர்ப்பது சீரல்ல!
இனிமையே தமிழின் வளமாகும்! - இங்கு
. . . . இருப்பன தமிழின் நலனாகும்!

தனித்தமி ழின்றேல் தமிழ் கெடுமே! - மிக
. . . . செந்தமிழ் நாளும் துயர்படுமே!
தனித்தமிழ் காப்போர் வளரட்டுமே - இங்கு
. . . . தனித்தமி ழாட்சி மலரட்டுமே!